தீபாவளி - 1
அனைவருக்கும் நமஸ்காரம்.
இன்று நரக சதுர்த்தி. நரகசுரன் என்ற அசுரனின் ஸ்மரண தினம். இந்த நாளை நாம் எல்லோர் வாழ்விலும் தீப ஒளி திருநாளாக கொண்டாடுகிறோம்.
உலகின் எல்லா மூலைகளிலும், நமது சனாதன கலாசாரத்தை கைவிட்டு இன்று கிறித்தவ பூமியாக இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கூட தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் நம் தமிழ்நாட்டில் மட்டும் - கருப்பு நாள், ஒருவன் இறந்த நாளை நாம் கொண்டாடுவதா? ஆரியன் கிருஷ்ணன் திராவிடன் நரகாசுரன் ஐ கொன்றுவிட்டான் என்றெல்லாம் உளறிக்கொண்டு திரியும் ஒரு சில சில்லறை கபோதிகளுக்கு பதில் சொல்லும் நிலையில் நாம் நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டாம். இருந்தாலும் நாம் நம் ஆத்மா முன்னேற்றத்திற்க்காக சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த பதிவு.
நரகாசுரனை கொன்றது கிருஷ்ணனா? - தீபங்களின் ஆவளி அதாவது தீபங்களின் வரிசை ஏன்?
இல்லை - நரகாசுரனை கொன்றது சத்யபாமா!
ஒருசமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில்அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்தவன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது.
புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆகஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, அந்த பௌமன் எனும் நரகாசுரன் (இன்றைய அஸ்ஸாம்) காமரூபம் என்னும் நாட்டை ஜ்யோதிஷபுரம் என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஜ்யோதிஷபுரம் என்றால் ஒளிபொருந்திய என்று பொருள்.
நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி, குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் கற்றறிந்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, "அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்" என்றார்.
"நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்" என்றான். அதற்கு "உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்" என்றார்.
அதனால் அவன் "ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது" என்று வரமருளக் கேட்டான்.
"தந்தேன் நரகா, நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்" இதைக்கூறி பிரம்மா மறைந்து விட்டார்.
வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான். (இப்போது புரிகிறதா - இந்த நாள் ஏன் தீப ஆவளி ஆனது என்று...)
எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர்.
ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.
கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு "முராரி" என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர்,
ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், "என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.
நரகாசுரனை எதிர்த்துச் போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடைய கோபமடைந்த சத்தியபாமா, நரகாசுரனுடன் சண்டை இட்டு அவனை வெட்டி வீழ்த்தினார் என்றும் கூறுவாரும் உளர். அச்சந்தற்ப்பத்தில் சத்தியபாமா தன் சக்தியை கிருஷ்ண பரமாத்மாவுக்கு அளிக்கப் பெற்று கிருஷ்ண பரமாத்மாவே நரகாசுரனை அழித்தார் எனவும் கூறுவாரும் உளர்.
இரண்டில் தொடரும்...
எவர்கிங் ஏகாம்பரம்