Wednesday, April 29, 2020

சந்தியாவந்தனம்-1

#பலா_அதிபலா
#சந்தியாவந்தனம்

தாடகை வதத்துக்காக விஸ்வாமித்திரர் இராமபிரானை அழைத்துச் செல்கிறார்.

அப்போது, இராமனுக்கு பல அஸ்திர/ தர்ம/ மந்திர உபதேசங்களையும் விஸ்வாமித்திரர் உபதேசிக்கிறார்.

வால்மீகி ராமாயணம்,
பாலகாண்டம்
ஸர்க்கம் 22ல்,

விஸ்வாமித்திரர் இராமருக்கு சொல்கிறார்.

குழந்தாய், அகத்தூய்மைக்காக ஆசமனம் செய்; கால தாமதம் செய்யாதே; பலா அதிபலா என்ற மந்திரங்களை, நீ ஏற்றுக் கொள். (இவைகளின் பலனை கேட்பாயாக).

களைப்பு, காய்ச்சல், உடல் தேய்வு முதலியன உண்டாகாது.

தூங்கிக் கொண்டிருக்கும்போதோ, கவனக்குறைவாக இருக்கும் போதோ கூட நிசாசரர்கள் உன்னைத் தாக்க முடியாது.

மண்ணுலகில் உனக்கு நிகரான தோள் வலிமை உடையவர் எவரும் இருக்க மாட்டார். 

மூவுலகிலும் உனக்கு ஈடானவர் யாரும் இருக்க முடியாது.

அழகிலோ, சாமார்த்தியத்திலோ, மெய் ஞானத்திலோ, அறிவைக் கொண்டு காரியத்தை நிச்சயிப்பதிலோ, பிறருடைய கேள்விக்குப் பதில் சொல்வதிலோ, உனக்குச் சமமானவர் இந்த உலகத்திலேயே எவரும் இருக்கமாட்டார்.

எல்லா மந்திரஞானத்திற்கும் தாய் போன்றவை #பலா_அதிபலா என்ற மந்திரங்கள். இந்த மந்திரத்தில் நீ சித்தி பெற்றுவிட்டால் உனக்கு நிகரானவர்களே இருக்கமாட்டார்கள்.
(ஸ்லோகங்கள் 12 முதல் 16 வரை)

மனிதருள் மாணிக்கமே இராமா, பயணம் சென்று கொண்டிருக்கும்போது, இந்த மந்திரங்களை ஜபித்தால், பசி தாகம் உனக்கு ஏற்படாது.

இந்த 2 மந்திரங்களில் நீ தேர்ச்சி பெற்றுவிட்டால் எல்லையில்லாத புகழ் உன்னிடம் வந்து சேரும்.

இந்த மந்திரங்கள் (பலா அதிபலா) இரண்டும் ப்ரம்மாவின் புத்திரிகள்.

காகுந்தனே, மிக உயர்ந்த பலன் உடைய இந்த மந்திரங்களை உபாசிக்க தகுதி உனக்கு உள்ளது, - சர்வ வல்லமையும் முன்பே உடைய அறம் தவறாதவனே, இந்த மந்திரங்களை (பலா_அதிபலா) தகுதியுள்ள நீ பெற்றுக் கொள்வதால் உனக்கு இன்னும் பெருமை அளிக்கும்.
(ஸ்லோகம் 17 முதல் 19வரை)

விஸ்வாமித்திரர் இராமனிடம் மேலும் சொல்கிறார் :-

பலா_அதிபலா என்னுடைய தவவலிமையால் பெறப்பட்டவை (அதனால் கூடுதல் சக்தி பெற்றிருக்கிறது) உனக்கு பலவிதத்தில் உதவியாக இருக்கப் போகின்றன.

இதைக் கேட்ட ராமன்,

மலர்ந்த முகத்தோடு, ஆசமனம் செய்து, தூய்மை பெற்று, மாசற்ற மாமுனி விஸ்வாமித்திரரிடமிருந்து பலா அதிபலா மந்திர உபதேசம் பெற்று,  மேலும் அதிக முகப் பொலிவு வசீகரத்துடன் திகழ்ந்தார்

(ஸ்லோகம் 20 முதல் 23 வரை)

இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த பலா அதிபலா மந்திரங்களை,  ஜபிக்கும் முறை / மந்திரம் தனி பதிவாக தொடரும்!!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...